தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது - இராணுவ தளபதி
Posted On Sunday 7 December 2008 at at 12:35 by Mikeஎல்லாம் எங்க நேரமப்பூ, எப்படி நீ தமிழர்கள் எல்லாமே ஜோக்கர்தான் என்று சொல்லமல் விட்டுட்ட. குண்டு போட்டு தமிழ் மக்களை கொல்ற உனக்கு எங்ளை பார்த்தால் ஜோக்கராத்தான் தெரியும். ஏன்னா நீ கொல்ல, கொல்ல இன்னும் உன்னை உட்கார வச்சி பேச நினைக்கறோம் பார்த்தியா, அது ஜோக்கர்தான்பா. ஒரு நாள் இந்த தமிழ் இன அழிப்பிற்கும்,கிளஸ்ரர் குண்டுகளுக்கும் நீ உலகத்திற்கு முன் பதில் சொல்ல வேண்டிய காலம் வரத்தான் போகுது.
இந்தியா கொடுக்கும் செல்லம்தான் உன்னை இந்த அளவு பேச வைக்கிறது. காலம், காலமாக உன் மிரட்டலுக்கு பயந்து சாவதை விட, தமிழீழம் ஒன்றே இந்தியாவின் நிரந்தர பாதுகாப்பு என இந்தியா உணரும் நாள் தொலைவில் இல்லை. அன்று தெரியும் யார் ஜோக்கர் என்று.
தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை இந்திய காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து "சண்டே ஒப்சர்வர்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வைகோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கைப் பிரச்சினையில் கவனமான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. .இதன் காரணமாகவே அது வன்னியில் உள்ள பொதுமக்களுக்கு தமது நிவாரணங்கள் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருந்தது என்றும் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் தற்போது நடைபெறும் போரில், அப்பாவி தமிழ் மக்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று இந்தியாவிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்தியா உதவ வேண்டும் என்று கோருகிறோம்.
நாட்டின் கிழக்குப்பகுதி ராணுவ நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் எங்களது திறமை சிறப்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே அணுகுமுறையைத் தான் வன்னி பகுதியை மீட்பதிலும் இராணுவம் மேற்கொண்டுள்ளது.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தில்லியில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சுமத்துவதில் ஈடுபட்டுள்ளது கவலை அளிக்கிறது. எனினும், இந்தியா இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளுடன் இலங்கைப் படைகள் போர் நிறுத்தம் செய்வதில் இந்தியா எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில்தான் விடுதலைப் புலிகளை இந்தியா வைத்துள்ளது. புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை குற்றவாளியாக ஏற்கெனவே இந்தியா அறிவித்துள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின் இலங்கை பிரச்சினை குறித்து இந்தியா தனது நிலையைத் தெரிவித்துள்ளது. எனவே, புலிகளுக்குச் சாதகமான நிலை எதுவும் இந்திய தரப்பில் ஏற்படப் போவது இல்லை.
புலிகளுடனான போரில் பீரங்கிகளின் தாக்குதலில் 16 ஆயிரம் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின் மீண்டும் களம் திரும்பியுள்ளனர்.
தற்போதைய போரில் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின் முல்லைத்தீவு பகுதியையும் மீட்பது உறுதி என்றார் பொன்சேகா.