இரத்த அபிசேகம் நடைபெறாமலேயே இலங்கை தமிழர்களின் புரட்சிப்பூ- விடுதலைப்பூ பூக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் கருத்து: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி

கருணாநிதி இப்படி தன் மவுனத்தை கலைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனமார்ந்த பாராட்டுகள். தமிழின துரோகிகள் ராயகரண், கருணா, பிள்ளையான், தினமலர், தினமணி முதல் தமிழின எதிரிகள் மகிந்த வரை அனைவருக்கும் தலையில் விழுந்த மரண அடி.


இலங்கையில் இரத்த அபிசேகம் நடைபெறாமலேயே புரட்சிப்பூ, புதுமைப்பூ, ஜனநாயகப்பூ, விடுதலைப்பூ, மறுமலர்ச்சிப்பூ, உரிமைப்பூ தமிழர்களின் வாழ்வுப்பூ பூக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, தி.மு.க.வின் கருத்து என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க.வின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இலங்கையில் காந்தியடிகளைப் போன்ற உருவம், ஆனால் பெரியாரை போன்ற உள்ளம் கொண்ட செல்வா தொடங்கியதுதான் உரிமை போராட்டம். அதற்கான ஆதரவு கேட்டு தமிழகத்திற்கு வந்தார். இங்கு வந்த போது அவரோடு அமிர்தலிங்கமும் வந்தார்.

இவர்கள் எல்லாம் இன்று இல்லை. இவர்கள் இல்லாமல் போனதற்கான காரணங்களை நான் ஆராய விரும்பவும் இல்லை. அதற்காக இப்போது கண்ணீர் விட்டு புண்ணியமும் இல்லை. செல்வா காலத்திற்கு பிறகு அங்கு இளைஞர்கள் தோன்றினார்கள். அந்த இளைஞர்கள்தான் சிறைச்சாலையிலே உயிர்நீத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தியாகம் அவர்கள் நினைத்த விடுதலை உணர்வு இன்றளவும் பட்டுப்போகாமல் இலங்கையில் இருக்கிறது.




ஆனால் முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீர வேண்டுமா? இது விவாதத்திற்குரிய விடயம். நெடுநாளாக விவாதிக்கப்படுகிறது. இதற்கிடையில் எத்தனையோ சமாதான குழுக்கள் வந்துள்ளன. நோர்வே உள்ளிட்ட பல நாடுகள், அறிவாளிகள், சமரச தூதுவர்கள், சமரசம் செய்ய வந்த நாடுகள் என அத்தனை பேரும் முயற்சித்தும் கூட அங்கே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. ஒருவேளை, தமிழனின் இரத்தம் முழுவதும் இலங்கை தீவிலே அபிசேகிக்கப்பட்டால்தான் அதற்கு பிறகுதான் சமரசம் வரும் என்ற செடி இலங்கையிலே முளைக்குமோ என்னவோ, எனக்கு தெரியவில்லை.

அத்தகைய இரத்த அபிசேகம் நடைபெறாமலேயே அங்கே புரட்சிப்பூ, புதுமைப்பூ, ஜனநாயகப்பூ, விடுதலைப்பூ, மறுமலர்ச்சிப்பூ, உரிமைப்பூ தமிழர்களின் வாழ்வுப்பூ அங்கே பூக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, தி.மு.க.வின் கருத்துமாகும். அந்த கருத்தை வெற்றி பெற செய்ய இந்தியாவிலே இருக்கின்ற தலைவர்கள், தமிழகத்தில் இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இந்த பொதுக்கூட்டத்தில் வேண்டுகோளாக விடுக்கிறேன்.

இந்த ஒரு விடயத்திலாவது சாகிற தமிழனை காப்பாற்றுகின்ற விடயத்திலாவது, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. நாம் ஒன்றுபட்ட நிலையிலே இந்த பிரச்சினையை அணுகுவோம். எந்த கசப்புகளும், எந்த மன வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

"உள்ளத்தால் ஒருவரே, வெள்ளம் போல் தமிழர் கூட்டம்..." என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவி வரிகளை நிறைவேறும் நாளை நான் எதிர்பார்க்கிறேன். அந்த நாள் உருவாக வேண்டும் என்றுதான் நான் தவம் இருக்கிறேன். அந்த தவம் பலிக்க வேண்டும். அது இதுவரையிலும் பலிக்காவிட்டாலும் கூட, ஈழத்தமிழர் பிரச்சினையிலாவது அந்த தவம் பலித்து அனைவரும் தமிழர்கள்தான், தமிழர்களுக்கு ஒரு தீங்கு வந்தால் எல்லாரும் கேடயங்களாக இருந்து அந்த தீங்கை தாக்குவோம். அந்த பகையை வெல்லுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் ஒரே உணர்வோடு இந்த பிரச்சினையை நோக்குகிறார்கள் என்ற மன ஆறுதல் ஏற்பட்டுள்ளது. நேற்று நான் அந்த செய்தியை வெளியிட்டவுடன் இங்கிலாந்து நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மான், இந்த செய்தியை இன்டர்நெட், பத்திரிகை செய்தியைப் பார்த்து விட்டு எனக்கு கடிதம் எழுதியுள்ளார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் எனக்கு கடிதம் எழுதியுள்ளது. இலங்கை எம்.பி.சேனாதிராஜாவும் கடிதம் எழுதியுள்ளார். (அந்த கடிதங்களை வாசித்துக்காட்டினார்).

வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் சமுதாயத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி என்னை துணை நில்லுங்கள் என்று சொல்கிறார்கள் என்றால் அந்த என்னை என்பதற்கு கருணாநிதி மட்டுமல்ல தமிழ் சமுதாயத்தை தமிழர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களை தமிழர்களுக்காக இயக்கம் நடத்துகின்ற அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.




தனி ஒருவனாக நின்று இந்த காரியத்தை சாதிக்க முடியும் என்று நான் சொன்னால் என்னை விட இறுமாப்பு உள்ளவன் யாரும் இருக்கமுடியாது. ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒரே உருவில், ஒரே வடிவில், ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம். இந்திய அரசு ஒத்துழைக்கும் என்று நம்புவோம். நம்பினால் நாம் வெற்றிபெறுவோம். அவர்கள் ஒத்துழைத்தால் நமக்கு வாழ்வு உண்டு. ஒத்துழைக்காவிட்டால் இலங்கை தமிழர்கள் மாத்திரமல்ல, இங்குள்ள தமிழர்களும் அடியோடு சாவோம். இதைத்தவிர வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

இந்த கூட்டத்தோடு இந்த போராட்டம் முடிவதல்ல, நமது குரல் இதோடு நிற்பதல்ல, வேறு வழி யோசிப்போம். பொதுக்குழுவில் இது பற்றி யோசித்து முடிவு எடுப்போம். அதற்கு வழியில்லாமல் இளகிய மனம் படைத்த பிரதமரும், அதைவிட இளகிய மனம்படைத்த சோனியாகாந்தியும் இலங்கை தமிழர்கள் மீது காட்டுகின்ற கருணையை, அன்பை, பாசத்தை, மனிதநேயத்தை இலங்கை தமிழர்களுக்கும் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மனிதர்களிடம் காட்டவேண்டிய மனிதநேயத்தை இலங்கை தமிழர்கள் மீதும் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்றார் அவர்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    சரியாக சொன்னிர்கள். இன்னும் பல துரோகிகள் உள்ளனர்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails