இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும்: வைகோ ஆவேசம்
Posted On Wednesday 17 September 2008 at at 12:15 by Mikeஇலங்கை அரச படையினர் தமிழர்களைக் கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு விட்டனர். இது போன்ற அக்கிரமங்களைச் செய்த எத்தனையோ உலக நாட்டுத் தலைவர்களைப்போல இலங்கை ஜனாதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிகையில் ராஜபக்ஷ கூட்டம், இலங்கைத் தமிழர்களை அழிக்கின்றது எனச் செய்தி வெளிவந்துள்ளது.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வில்சன் என்பவர் 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் காணாமற் போயுள்ளனர் எனத் தெரிவிக்கின்றார். இவற்றை எல்லாம் நாம் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இதுபோன்ற அக்கிரமங்களைச் செய்த எத்தனையோ உலகநாட்டுத் தலைவர்களைப் போல இலங்கை ஜனாதிபதி மஹிந்தவும் சர்வதேச நீதிமன்றின்முன் நிறுத்தப்படவேண்டும்.
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ராடர் கருவிகள் மட்டு மல்ல விமானிகள் மற்றும் இராணுவத் தொழில்நுட்பவியலாளர்களையும் அனுப்பி இருக்கிறார்கள். இதெல்லாம் கூலிப்படை போல் செயற்படுவதற்கு ஒப்பான செயலாகும்.
இதன் மூலம் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மத்திய அரசு துணை போயுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்டுவோம். என்றார்.