பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும்: ராமதாஸ்
Posted On Sunday 14 September 2008 at at 07:04 by Mikeசென்னை: பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
பா.ம.க. சார்பில் தி.மு.க. கொள்கையும், பா.ம.க. கொள்கையும் என்ற தலைப்பில் சென்னை வியாசர்பாடியில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசுகையில்,
”பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ம.க. போல் எந்தக் கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை.
தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினோம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பா.ம.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்கிறார்கள். பா.ம.க. கொள்கை உள்ள கட்சி. இங்கு ரவுடிகளுக்கு இடமில்லை. அவர்களை நாங்கள் சேர்ப்பதும் இல்லை. எங்கள் கட்சிகாரர்களுக்கு ரோஷம் உண்டு. தன்மான உணர்வு உண்டு. தன்மானத்தை மட்டும் விட்டுத்தர மாட்டார்கள்.
இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். அதை கொடுத்தாலே மக்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்கள். ரூ.1 அரிசி யாருக்கு வேண்டும்?
இலங்கையில் ஈழத்தமிழர்களை ராணுவம் அழித்து வருகிறது. அந்தத் தமிழர்களை காக்க வேண்டமா? நம் கண் முன்னே ஓர் இனம் அழிகிறது. தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள். அவர்களை காக்க வேண்டமா? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும். அதைபோல் 2011இல் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஒரு துளி மதுகூட இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்று கூறினார்.