தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் படையினர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு மீனவர் பலியானார்(எவன் செத்தாலென்ன, சகோ வரவேற்போம், தமிழனை கொல்ல பாடுபடுவோம்)
Posted On Friday 7 March 2008 at at 11:22 by Mikeராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று காலை 262 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த குயின்ராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அக்காள்மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த கிறிஸ்டி (வயது 30) மற்றும் அந்தோணிராயப்பன் (வயது 31), மரியகுவிட்டன் (வயது 20) ஆகியோர் சென்றனர். இந்த படகுக்கு டிரைவராக மரியபிச்சை (வயது 42) இருந்தார்.
பகல் 12.30 மணியளவில் இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து 3 சிறிய ரோந்து கப்பல் அதிவேகமாக வந்தது. அவை ஒவ்வொன்றிலும் இலங்கை கடற்படையினர் 6 பேர் இருந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்தனர்.
இதனால் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் அவசர அவசரமாக தங்கள் படகை ராமேஸ்வரம்நோக்கி திருப்பினார்கள். மரியபிச்சையும் தனது படகை கரைக்கு திருப்பிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அந்த படகை இலங்கை கடற்படையினர் சூழ்ந்து கொண்டனர்.
இதனால் பயந்து போன அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் தங்கள் கையை மேலே தூக்கினர்கள். எனினும் அவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர். இதில் கிறிஸ்டியின் தலையின் பின்புறம் குண்டு ஒன்று பாய்ந்தது.
அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். மற்றவர்கள் படகில் படுத்துக் கொண்டதால் குண்டு மழையில் இருந்து தப்பினார்கள். சுமார் 5 நிமிட நேரம் துப்பாக்கி சூடு நடத்தியபின் இலங்கை படையினர் திரும்பிச் சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிறிஸ்டியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் படகை அதிவேகமாக கரைக்கு செலுத்தினர். வழியில் அவர்களின் படகு பழுதடைந்தது.அதை அவசர அவசரமாக சரி செய்து மண்டபம் வடக்கு துறைமுகத்துக்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த கிறிஸ்டியை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி குண்டுக்கு மீனவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனால் மீனவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.