தமிழகத்தில் புலிகளுக்காக ஊர் பெயரினையே புலியூர் என மாற்றி கொண்ட கும்பாரப்பட்டி கிராம மக்களின் மாவீரர் தினம்



விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதர வாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம்.இந்த ஆண்டு பிரபாகரனும், புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்பட்டதாகக் கருதப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைபிடிக்கப்பட்டன.

கடந்த 26 ஆம் தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரசார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இடங்களில் காங்கிரசாருக்கு இந்த சிரமத்தைத் தராமல், போலீசாரே அந்த கிழிப்பு, உடைப்பு பணிகளைப் பார்த்துக் கொண்டனர். ஆனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில்  எந்த இடையூறுமின்றி வெகு சிறப்பாக பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடி மாவீரர் அஞ்சலி தினமாக கடைப் பிடித்து அசத்தியிருக்கிறது பெரியார் திராவிடர் கழகம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கொளத்தூர் பகுதியில் கும்பாரப்பட்டி என்ற சிறு கிராமத்தில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்து, அங்கே ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தப் போர்ப் பயிற்சி  84 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் 86 ஆம் ஆண்டு வரை நடந்தது.

புலிகள் தங்கி போர்ப் பயிற்சி எடுத்ததால், அந்தக் கிராமத்தவர்கள் தங்கள் கிராமப் பெயரை புலியூர் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு புலியூர் எனப்படும் கும்பாரப்பட்டியில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருப்பதைக் கேள்விப்பட்டு நாமும் புலியூருக்கு விரைந்தோம்.

கொளத்தூரிலிருந்து சின்னதண்டா செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புலியூர். 27 ஆம் தேதி நாம் அங்கு சென்றபோது கிராமமே புதுப்பொலிவுடன் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் புலிகளின் இயக்க நிறங்களான மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் காகிதத் தோரணங்கள், கொடிகள்.ஊர் பேருந்து நிலையத்தில், புலிகளால் கட்டித் தரப்பட்ட பயணிகள் நிழற்கூடம் ஒன்று காட்சியளித்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் கொந்தளித்த கொளத்தூர் காங்கிரசார், புலிகள் மீது கோபம் கொண்டு அந்த நிழற்கூடத்தை அப்போது அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன் பிறகு அந்த நிழற்கூடத்தைச் செப்பனிட்டு, புலிகளின் தளபதியாக அங்கு தங்கியிருந்த பொன்னம்மானின் பெயரை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள் மக்கள். புது வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த நிழற்கூடத்தின் முன்னால்தான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நிழற்கூடத்துக்கு நேர் எதிரே புலிகள் பயிற்சி பெற்ற இடத்துக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் தொடக்கம் 'புலியூர் பிரிவு' என்ற பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்ப் பலகை திறக்கப்பட தயாராக இருந்தது.

கறுப்பு உடையணிந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு கூட்டம் கூட்டமாக தனி வாகனங்களில் வரத் தொடங்கினர். சுமார் நானூறுக்கும் அதிகமானோர் வந்து குவிந்தனர். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், அவருடைய சகோதரர் பழனிசாமி, இந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். புலிகள் பயிற்சி பெற்ற காலத்தில் அவர்களுக்கு உதவிய முத்துசாமி என்பவர் புலியூர் பிரிவு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.

அதன்பின் தமிழீழ மாவீரர் நாள் பேனருக்கு முன்பு பெரியார் திராவிடர் கழக இளைஞர்கள் இருவர் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாகக் கலைந்து சென்றனர். அங்கு ஒரு போலீஸ்காரர்கூட நம் கண்ணில் தட்டுப்படவில்லை. துளி அசம்பாவிதமோ, இடையூறோ இன்றி திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

முத்துசாமியிடம் பேசியபோது பல சுவையான தகவல்களைத் தந்தார் அவர்.
"புலிகள் இங்கே மூன்றாண்டு காலம் போர்ப் பயிற்சி மேற்கொண்ட காலத்தில் அவர்கள் பேசிய தூய தமிழால் கவரப்பட்டு இன்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் தூய தமிழில் பேசி வருகிறார்கள். புலிகள் இயக்க இளைஞர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளவர்களாக நடந்து கொண்டனர். புலிகளின் மருத்துவ முகாமாகவும் பயன்பட்டது. அவர்கள் பயன்படுத்திய ஜீப்போ எங்கள் மக்களின் போக்குவரத்து வாகனமாக உதவியது. நெருங்கிய உறவினர்களைப் போல எங்கள் நெஞ்சத்தில் பசங்கள் (புலிகளை இங்குள்ளவர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) ஒட்டிக் கொண்டார்கள். புலிகள் இருந்த காலத்தில் திருட்டுப் பயமே இருக்கவில்லை.

மொத்தம் மூன்று குழுக்களாக அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். முதல் குழுவுக்குத் தலைமையேற்றுப் பயிற்சி தந்தவர் பொன்னம்மான். அவருடன் வந்திருந்த புலேந்திரன் ஈழப் போரில் உயிர்நீத்ததைக் கேள்விப்பட்டு எங்களது நெருங்கிய உறவினரை இழந்ததுபோல கதறியழுதோம்.

பொன்னம்மான் சாதாரணமாக தரையில்தான் பசங்களோடு பசங்களாகப் படுத்துறங்குவார்.மூன்று முறை இந்தப் பயிற்சியை மேற்பார்வையிட வந்திருந்த புலிகள் தலைவர் தம்பி பிரபாகரனும்கூட தரையில் தான் படுத்துறங்கினார். அவர்கள் எங்கள் தலைவர் கொளத்தூர் மணியை 'அண்ணன்' என்றே பாசத்துடன் அழைத்து வந்தனர். பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய அவர்களை கலங்கிய கண்கள், கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைத்தோம்" என்ற முத்துசாமி, புலிகள் தங்கியிருந்து பயிற்சியெடுத்த வனப்பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். தற்போது வனத்துறை வசமிருக்கும் அந்தப் பகுதியில் புலிகள் கட்டியிருந்த ஒரு தண்ணீர்த் தொட்டியும், இரண்டு சிறு காவல் சுவர்களுமே அவர்களது நினைவைச் சொல்ல மிச்சமிருந்தன



புலியூரில்மாவீரர் தின வீரவணக்க நிகழ்ச்சி நடந்த அதே நாளில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் 'கரும்புலி மில்லர் நினைவரங்கம்'என்ற சிறிய ஹால் ஒன்றை கொளத்தூர் மணிவிடுதலை இராசேந்திரன்கோவை இராமகிருட்டிணன் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல் முருகன் ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய கொளத்தூர் மணியிடம் பேசினோம், "புலியூர் பகுதி புலிகளின் வீர வரலாற்றில் இடம் பிடித்த ஒரு முக்கிய பகுதி. இங்கு 34 மாதங்களில் ஏறத்தாழ 2000 புலிகள் பயிற்சி பெற்ற போதிலும் ஒரு துளி அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லைஎன்றார் கொளத்தூர் மணி.
நாம் அங்கிருந்து திரும்பும்போது மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரன் பிறந்த நாள்மாவீரர் நினைவு தின போஸ்டர்கள்கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றச் சொல்லி பெரியார் திராவிடர் இயக்கத்துப் பிரமுகர்களிடம் போலீசார் தூதுவிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி வரை பெரியார் தி.க.வினர் அதற்கு அசைந்து கொடுக்கவேயில்லை.

வை. கதிரவன்
'குமுதம் ரிப்போர்ட்டர்' 6.12.2009



-
சம்பத்

"மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் எங்கள்  தமிழ்மண் குளிக்கும்"....

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails