குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படி புரியும்?: குமுதம் கேள்வி
Posted On Wednesday, 29 October 2008 at at 06:30 by Mikeபோயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்:
"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்சினை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?
சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-))