கடற்படைத் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் மஹிந்தவின் கொடும்பாவியை எரித்து வக்கீல்கள் போராட்டம்
Posted On Tuesday 15 July 2008 at at 11:15 by Mikeதமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலைக் கண்டித்துச் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர்.
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராகக் கோஷம் எழுப்பினர். பின்னர் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவியைத் தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து பொலிஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கித் தூர வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் கொடும்பாவியை அணைக்க விடாமல் வக்கீல்கள், பொலிஸாரைத் தடுத்து நிறுத்தியதால் கொடும்பாவி முழுமையாக எரிந்து சாம்பலானது. அதன் பிறகே வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தால், என்.எஸ்.சி. போஸ் சாலையில் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டது