டோறா எவ்வாறு அழிந்தது?- கடும் குழப்பத்தில் கடற்படை: மாயமில்லை, மந்திரமில்லை ஒடுடா தம்பி, ஒடுடா தம்பி

மாயமில்லை, மந்திரமில்லை, ஒடுடா தம்பி, ஒடுடா தம்பி

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் நேற்று முன்நாள் சனிக்கிழமை சிறிலங்கா கடற்படையினரின் டோறா அதிவேக தாக்குதல் படகு திடீரென அழிந்து போனது குறித்து கடற்படை கடும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருப்பதாக கொழும்பு வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:

கடும் மழை காரணமாக வன்னிக் களமுனையில் மோதல்கள் மந்த நிலையை அடைந்துள்ள போதும், கடுமையான மோதல் ஆழ்கடலுக்கு பரவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆறு டோறா தாக்குதல் படகுகள் இரண்டு, இரண்டாக வட-கிழக்கு கடற்பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் பலம் மிக்க தளப்பகுதியான முல்லைத்தீவுக்கு அண்மையாக உள்ள நாயாறு ஆழ்கடல் பகுதியில் இரு டோறாக்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த போது உள்ளூரில் கட்டப்பட்ட பி-437 இலக்கத்தினையுடைய டோறா திடீரென வெடித்துச் சிதறியது.

எனினும் மற்றைய டோறாப் படகு அந்தப் படகில் இருந்து கடலில் தத்தளித்த 6 கடற்படையினரைக் காப்பாற்றியது. காப்பாற்றப்பட்டவர்களில் டோறாப் படகின் கட்டளை அதிகாரியும் அடங்குவார். அதில் இருந்து ஏனைய 10 கடற்படையினரும் காணாமல் போய்விட்டனர்.

டோறாப் படகு கடல்கண்ணியில் சிக்கி அழிந்ததாக கடற்படையினர் சந்தேகப்படுகின்றனர். எனினும் அது தொடர்பாக உறுதியாக எதுவும் கூறமுடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அது ஒரு மனித டோப்பிடோ வெடிகுண்டு தாக்குதலாகவும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனித டோப்பிடோ வெடிகுண்டைப் பொறுத்தவரையில் அது இரு வகையாக இருக்கலாம். ஒன்று தற்கொலைதாரி வெடிகுண்டை கட்டிக்கொண்டு டோறாவுடன் மோதியிருக்கலாம். இரண்டாவது சுழியோடிகள் வெடிகுண்டு சாதனங்களை டோறாவை நோக்கி வழிநடத்தியிருக்கலாம்.

இந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டு பல கடற்கண்ணிவெடிகளை கடற்படையினர் மீட்டிருந்தனர். எனினும் டோறா எதனால் அழிந்து போனது என்பது தொடர்பாக தம்மால் இன்னமும் ஒரு இறுதி முடிவுக்கு வரமுடியவில்லை என்று கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

டோறா எவ்வாறு அழிந்து போனது என்பது குறித்து அழிந்து போன டோறாவில் இருந்து காப்பாற்றப்பட்ட படையினராலோ அல்லது மற்றைய டோறாப் படகில் இருந்தவர்களாலோ எதுவும் கூற முடியிவில்லை. அந்தப் பகுதியில் மோதல்கள் நடைபெறவில்லை எனவும், தம்மிடம் இலத்திரனியல் சான்றுகள் எவையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்நாள் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட கொள்கலன் ஒன்றையும், சிறிய பிளாஸ்ரிக் துண்டையும், எரிந்து போன பொலித்தீன் பகுதியையும் படையினர் மீட்டுள்ளனர்.

இந்த கொள்கலனுக்குள் வெடிமருந்துகள் மறைத்து வைத்திருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் டோறா எப்படி அழிந்து போனது என்பது தொடர்பாக அறிந்து கொள்ளமுடியும் என்று கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் டோறாப்படகு கடற் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்திருந்தது. எனினும் அங்கு மோதல்கள் நடைபெறவில்லை எனவும் கடற்கலம் கடற்கண்ணிவெடித் தாக்குதலில் அழிந்து போயுள்ளதாகவும், காணாமல் போன கடற்படையினரை தேடி வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்கண்ணிவெடி மூலம் தற்போது டோறாப் படகு அழிக்கப்பட்டது நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக அதிகளவில் கடற்கண்ணிகள் பயன்படுத்தப்பட்டால் அது ஆழ்கடல் பகுதிகளில் கடற்படையினரின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தலாம். இது கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைளை மட்டும் பாதிக்காது, யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள 40,000-க்கும் அதிகமான படையினருக்கான வழங்கல்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவர்களுக்கான வழங்கல்கள் திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறைக்கு நகர்த்தப்படுவது வழக்கம்.

மேலும் பெருமளவான படையினரும் கடல்வழி மூலமே நகர்த்தப்படுவதுண்டு. கடந்த காலங்களில் கடற்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படதனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது. இதனிடையே முல்லைத்தீவு கடற்பகுதிகளில் கடல் கண்ணிவெடிகளை புதைப்பதன் மூலம் கடல்வழி மூலமான படையினரின் தரையிறக்கத்தை தடுக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக படை நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. மன்னாரின் கட்டுக்கரைக்குளம் பகுதிக்கு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளால் நகர்ந்த படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

மன்னார் பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை ஊடுருவிய விடுதலைப் புலிகள், சவுத்பார் பகுதியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார்ப் பகுதி இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர், பௌர்ணமி பூசை ஒன்றிற்காக மூன்று பேருந்துகளில் பௌத்த துறவிகளை மன்னார் பகுதிக்கு வரவழைத்த போது இத்தாக்குதல் இடம்பெற்றது. முதலாவது பேருந்தில் பௌத்த துறவிகள் இருந்த போதும் கிளைமோர் குண்டு இலக்கு தவறியதால் இரண்டாவது பேருந்து தாக்குதலில் சிக்கிக்கொண்டது.

இதன் போது கப்டன் தர அதிகாரி ஒருவரும், இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணலாற்றுப் பகுதியிலும் கடும் மழை காரணமாக நிலங்கள் கடும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. கடந்த வாரம் அங்கும் கடுமையான எறிகணை வீச்சுக்களே இடம்பெற்றுள்ளன. சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் நிறைந்துள்ளதாகவும் அதனால் பெருமளவிலான படையினர் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சு வடக்கு-கிழக்குப் பகுதியில் பெருமளவான படைத்துறை மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வவுனியா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். திருகோணமலையில் இருந்தும் இவ்வாறான மாற்றங்கள் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறிலங்காவின் முப்படையில் இருந்து ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இராணுவத்தின் பொறியியல் மற்றும் மின்னியல் துறை வளாகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஓய்வுபெற்ற பல மேஜர் ஜெனரல்கள் பலதரப்பட்ட உத்திகள் தொடர்பாக உரையாற்றியிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails